திருவண்ணாமலையில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி ஆர்டிஓ அலுவலகத்தில் மக்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்: ஆர்டிஓ பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தேனிமலையில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி, ஆர்டிஓ அலுவலகத்தில் இரவு முழுவதும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆர்டிஓ தேவி பேச்சுவார்த்தை நடத்தினார். திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் 1.50 ஏக்கர் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருபிரிவினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். மற்றொரு பிரிவினர் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  மேலும், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நிலத்தை அளந்து கொடுக்குமாறு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்து, நிலத்தை சுற்றிலும் கடந்த 21ம் தேதி கம்பிவேலியை அமைத்தனர்.

இந்நிலையில், தேனிமலை பகுதியை ஒருபிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரியும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலை 6 மணியளவில் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள், தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி, இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த ஆர்டிஓ தேவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆர்டிஓ, மனுதாரர் அவருக்கு சொந்தமான இடம் என உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி தான் இடம் அளவீடு செய்து வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு போராட்டக்காரர்கள், பிரச்னைக்குரிய அந்த இடத்தை யாரும் பயன்படுத்தாத வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என ஆர்டிஓ தெரிவித்ததையடுத்து, காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர், அவர்கள் சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி அமைத்த வேலி அகற்றம்

திருவண்ணாமலை தேனிமலையில் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறையினர் கடந்த 21ம் தேதி நிலத்தை அளவீடு செய்து கம்பி வேலி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்டிஓ அலுவலகத்தில் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த வேலிகளை அகற்றியதோடு, அங்கு பதிக்கப்பட்டிருந்த கற்களையும் உடைத்து எறிந்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்த முடியாமல் திகைத்து நின்றனர். பின்னர், தங்களது செல்போனில் போராட்டக்காரர்களை படம் பிடித்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் அங்கிருந்த வேலி, கற்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: