நாகை: இலங்கை வழியாக 6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து நாகை மாவட்டம் கடலோர எல்லை மற்றும் சாலை மார்க்க எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்துள்ளது. இதை தொடர்ந்து நாகை மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாகூரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது, சந்தேகத்தின் அடிப்படையில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செய்யது அபுதாகீர் (31), ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள மணல்வாடி என்று தெரியவந்துள்ளது. அவரை நாகை டவுன் காவல்நிலையத்தில் ரகசிய இடத்தில் தனியாக வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.