மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 5ம் தேதி முதல் சோழங்கநல்லூர் ஓஎன்ஜிசி பிளான்ட் முன்பு தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று பொதுமக்கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் ஓஎன் ஜிசி சார்பில் புதிய எண்ணெய் துறப்பன கிணறு அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணிகளை நிறுத்தக்கோரி, ஓஎன்ஜிசி பிளான்ட் முன்பு இந்தியகம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்கள் போராட்டக் குழுவும் தன்னெழுச்சியான பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டக்குழுவின் தலைவர் ராஜ்பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோழங்கநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதியின்றி துறப்பன பணிகளில் ஈடுபட்டு வரும் ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக தனது பணிகளை நிறுத்தி விட்டு கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட்டு காவிரி பாசன பகுதிகளை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் சோழங்கநல்லூர் ஓஎன்ஜிசி பிளான்ட் முன்பு காந்திய சிந்தனையோடு அறவழியில் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடத்த உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.