தென்காசி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது. குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் ‘டல்’’ அடித்த நிலையில், ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்தே சாரல் நன்றாக பெய்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான அருவிகளில் 5 நாள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினமும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அன்று மாலை முதல் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து முதற்கட்டமாக ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.