தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால, வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் செல்கின்றனர். தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், கிழக்கு தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் சானடோரியம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து பல நாட்களாக எரியாததால், இரவு நேரங்களில் மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.