×

எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும் சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்துக்கு அனுமதி

சென்னை: எண்ணூர் துறைமுகம் - மாமல்லபுரத்தை இணைக்கும்  சென்னை  சுற்றுவட்ட சாலை திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. எண்ணூர் துறைமுகம் மற்றும் மாமல்லபுரத்தை இணைக்கும் சுற்றுவட்ட சாலையை ₹6,175 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சி முறை ஒப்புதல் அளித்திருந்தது. தெற்கு மாவட்டங்களில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்கு பெட்டக வாகனங்கள் செல்வதற்கு உதவியாக இந்த 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையின் மொத்த நீளம் 133 கிலோ மீட்டர். இதில் 97 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே இருக்கும் சாலை பலப்படுத்தப்பட உள்ளது. இந்த சுற்றுவட்ட சாலை எண்ணூர் துறைமுகத்தில் ஆரம்பித்து மாமல்லபுரத்தில் முடிகிறது. காட்டுப்பள்ளி, புதுவாயல், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சிங்கபெருமாள் கோவில் வழியே மாமல்லபுரம் வரை செல்கிறது.

கடந்த ஆண்டு இத்திட்டத்தை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம்  இதற்கு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறை கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.  அதில் முக்கியமான நிபந்தனைகளாக, “தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை குளங்கள், ஏரிகளை பாதிக்கக் கூடாது. கடற்கரை ஒழுங்காற்று மண்டல பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கக் கூடாது. சாலை அமைக்கப்பட உள்ள கடலோர பகுதிகளுக்கு அருகில் மாங்குரோவ் மரங்கள் நட வேண்டும். சாலையை ஒட்டி பனைமரங்கள் நட வேண்டும். மீனவ மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது” என்று நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

81 கிராமங்கள் வழியே அமைகிறது


இந்த புதிய சாலையில் 5 பெரிய  பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4  மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81  கிராமங்கள் வழியே, 77 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாகவும், 2  கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதி வழியாகவும் இந்த சாலை அமைய உள்ளது.  இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தின்  கொண்டமங்கலம், செங்குன்றம் ஆகிய  இடங்களில்  25 ஏக்கர் வனப்பகுதி கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும்  இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள இடங்களில் இருக்கும் 4797  மரங்களில் 2168 மரங்கள் பாதிக்காதபடியும்,  2629 மரங்கள் வேரோடு  இடமாற்றமும் செய்யப்படும் என திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai-bound road project, connecting Nannur port - Mamallapuram
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...