×

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி

சென்னை:  தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களான ஆந்திரா, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கும், ஈரோடு, சேலம், திருப்பூர், ஊட்டி போன்ற பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதைப் போன்று எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, காரைக்குடி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், செல்ல வேண்டிய இடங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி விரைந்து செல்ல முடியும் என்பதாலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேர் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் மாநிலத்தில் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி தமிழகத்தில் டிஜிபி திரிபாதி மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாநகர கமிஷனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாநிலம் முழுவதும் தேசிய மற்றும் மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே ஐ.ஜி வனிதா, ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில் சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன், ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்து அதன்பிறகுதான் ரயில் நிலையத்திற்குள் உள்ளே அனுமதித்தனர். மேலும் ரயில் நிலையங்கள் முழுவதும் வெடிகுண்டு பிரிவை சேர்ந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோன்று, எழும்பூர் ரயில் நிலையத்திலும் ரயில்வே எஸ்ஐ அமுதா மற்றும் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலும் 100க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எழும்பூர் ரயில்நிலையங்களிலும் பயணிகளை பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Terrorist intrusion alert , Tamil Nadu
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...