புதுடெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் உத்தரவை இரு வாரங்களில் அமல்படுத்தும்படி உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சதி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள பாஜ மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான வழக்கு, கடந்த 1992ம் ஆண்டு முதல் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 19ம் தேதி, இந்த நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலத்தை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, விசாரணை முடிந்து தீர்ப்பு கூறும் வரை சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலத்தை நீடித்து ஆணையிட்ட நீதிபதிகள், 9 மாதத்துக்குள் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கெடு விதித்தனர்.