×

ரயில்வே நிறுவனங்களின் 2 கோடி பங்குகளை விற்க அரசு அதிரடி

புதுடெல்லி: ரயில்வே துறையிடம் உள்ள மிகப் பெரிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி) ஆகியவற்றில் மத்திய அரசின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை இந்த நிதியாண்டில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு தொடங்க உள்ளது. ஐஆர்சிடிசி கடந்த வியாழனன்று தன்னிடம் உள்ள பங்குகளில் 2 கோடி பங்குகளை விற்க, வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் அரசின் பங்குகள் 12 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரயில் டிக்கெட்கள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்களை வழங்கும் மிகப் பெரிய ஆன்லைன் கம்பெனியும் தனியார் மயமாக்கல் பட்டியலில் உள்ளது. இருப்பினும், கம்பெனியின் மதிப்பீடு சரிந்துள்ளதால் தற்போதைக்கு இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதிப்பீடு உயர்ந்ததும் இந்த கம்பெனியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை அரசு தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிஓஎன் இன்டர்நேஷனல், ஆர்டிஇஎஸ் ரயில் விகாஸ் நிகாம், ஐஆர்எப்சி மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றின் பங்குகலை தனியாருக்கு விற்க அரசு பட்டியல் தயாரித்துள்ளது. அதில், ஐஆர்சிஓஎன் இன்டர்நேஷனல், ஆர்ஐடிஇஎஸ் ஆகிய இரு நிறுவனங்களை கடந்த நிதியாண்டில் அரசு பட்டியலில் சேர்த்திருந்தது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.500 முதல் 600 கோடி வரையில் நிதி திரட்ட முடியும் அதேபோல் ஐஆர்எப்சி நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ.2,000 கோடி திரட்ட முடியும் என்று மத்திய அரசு எதிர்பாக்கிறது.

Tags : Railway Companies, Govt
× RELATED ராணுவ ரகசியங்களை தந்த ரயில்வே அதிகாரி கைது