புதுச்சேரி: புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் கூடும் நிலையில் துணை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி தரப்பில் எம்என்ஆர் பாலனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவதற்கு நேற்று நிதியமைச்சகம் ஒப்பதல் வழங்கியது. இதையடுத்து, அந்த கோப்பு மத்திய உள்துறையிடம் சென்றுள்ளது. அங்கு ஓரிரு நாளில் அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லி சென்ற முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் இன்று புதுச்சேரி திரும்புகின்றனர். நாளை மறுநாள் (திங்கள்) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூட்டம் மீண்டும் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று மதியம் சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டார். சபை தொடங்கியதும் அலுவல் குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும். இந்த கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.