சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து வினாடிக்கு 18,000 கனஅடியில் இருந்து 19,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில் பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மழை குறைந்த போதும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போது மேட்டுர் அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் 117 அடியாகவும், நீர் இருப்பு 88.795 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.