தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: திருவாரூரில் சந்தேகத்தின் பேரில் 10 பேரை கைது செய்தது காவல்துறை

திருவாரூர்: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் கைதாகி உள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக போலீசாருக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலூரில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் 6 பேரின் புகைப்படங்கள் ஊடங்கங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடவில்லை என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில், திருவாரூரில் சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு குற்றவழக்குகளில்  தொடர்புடையவர்கள் என திருவாரூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: