நெல்லை ரயில்நிலையத்தில் பரபரப்பு நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த ஸ்ரீவைகுண்டம் பெண்

* பிரசவம் பார்த்த மகளிர் போலீசாருக்கு பாராட்டு

நெல்லை : நெல்லை ரயில்நிலைய 4வது நடைமேடையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ரயில்வே பெண் போலீசார் மேற்கொண்ட பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பெண் போலீசாரை பயணிகளும், பொதுமக்களும் பாராட்டுகளை குவிக்கத் துவங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல் வருமாறு: தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் தெப்பக்குளத் தெருவை சேர்ந்த சுடலைமனைவி மாரியம்மாள் (28). நிறைமாத கர்ப்பிணியான  இவர் நேற்று தனது 2வயது குழந்தை கோப்பெருந்தேவியை அழைத்துக்கொண்டு கடையத்தில் வசித்து வரும் தாய் வீட்டிற்கு ரயிலில் புறப்பட்டார்.

திருச்செந்தூர்- நெல்லை ரயிலில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து நெல்லை வந்த அவர், கடையம் செல்வதற்காக நேற்று மாலை நெல்லை ரயில் நிலைய 4வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த செங்கோட்டை ரயிலில் ஏறினார். ஆனால், ரயில் புறப்படும் முன்னே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ரயிலில் இருந்த சக பெண் பயணிகள், அவரை கைத்தாங்கலாக ரயிலில் இருந்து பத்திரமாக இறக்கி நடைமேடையில் அமர வைத்தனர். இதனிடையே மாரியம்மாள் 2 வயது குழந்தையையும் அழைத்து வந்திருந்ததால் பயணிகள் செய்வதறியாது விழித்தனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அங்கு விரைந்து வந்த ரயில்வே எஸ்ஐ ஜூலியட், பெண் காவலர்கள் ராதா, விஜயசாந்தி உள்ளிட்டோர் மாரியம்மாளை நடைமேடைபகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றதோடு 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்தனர்.  ஆனால், ஆம்புலன்ஸ் விரைந்து வருவதற்குள் பிரசவ வலி மேலும் அதிகரித்ததால் வேதனை தாளாமல் மாரியம்மாள் துடி துடித்தார். இதையடுத்து அவருக்கு பெண் போலீசாரே பிரசவம் மேற்கொள்ள துணைபுரிந்தனர். இதில்  மாரியம்மாளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தகவலறிந்து விரைந்துவந்த ரயில்வே இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தாயையும், குழந்தையையும் பார்வையிட்டதோடு இருவரையும் பின்னர் வந்த 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.  ரயில் நிலைய நடைமேடையில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ரயில்வே பெண் ேபாலீசாரை பயணிகளும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

Related Stories: