நெல்லை : பாளையில் அமைக்கப்பட்டுள்ள உர செயலாக்க மையத்தில் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக குடியிருப்போர் புகார் தெரிவித்துள்ளனர். பாளை என்ஜிஓ ஏ காலனி அருகே மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட சக்திநகர், நீலகண்டநகர் பகுதியில் உரம் செயலாக்க மையம் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதமாக மேலப்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து நுண் உரம் என்ற பெயரில் மாமிச கழிவுகள், மீன் கழிவுகள், கோழிக்கழிவுகளை கொண்டுவந்துகொட்டுகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதால் அருகே குடியிருப்போர் இரவில் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் அழுகிய குப்பையில் இருந்து கொசு, சிறிய வண்டு உள்ளிட்ட பூச்சிகள் உருவாகின்றன. இது சுகாதார குறைபாட்டை ஏற்படுத்துவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதை மாநகராட்சி உடனடியாக தடுத்துநிறுத்தவேண்டும் என மக்கள் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.