விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், பெரியம்மாள் தம்பதியினரின் மகள் சரண்யா. இவர் பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சரண்யா வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருத்தை குடித்ததாகவும், உடனடியாக அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.