வீட்டில் திருமணம் செய்ய முற்பட்டதால் நிகழ்ந்த விபரீதம்: கள்ளக்குறிச்சியில் +2 மாணவி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், பெரியம்மாள் தம்பதியினரின் மகள் சரண்யா. இவர் பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சரண்யா வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிமருத்தை குடித்ததாகவும், உடனடியாக அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் சரண்யாவின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சரண்யாவின் தாய் பெரியம்மாள் வரஞ்சரம் காவல் நிலையத்தில் தனது மகள் வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். ஆனால் ஐந்தாண்டுகளுக்கு முன்பு சரண்யாவின் தந்தை இறந்து விட்ட நிலையில் சரண்யாவின் அண்ணன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சரண்யாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில் சிறிதும் உடன்பாடில்லாத சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: