வேதாரண்யம் பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் :வேதாரண்யம் பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் உப்பள பகுதிகள் பாதிக்கப்பட்டு, கடல் சேறு ஒரு அடிக்கு மேல் உட்புகுந்தது. இந்தாண்டு 40 சதவீதம் மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த மாதம் தொடர்ந்து வீசிய ஆடி காற்றால் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட பாத்திகளில் கடல் நீர் உள்ளே புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 ஆயிரம் ஆண் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி அடியோடி நிறுத்தப்பட்டது. சாலை ஓரங்களில் சேமித்து வைத்துள்ள உப்புகளை ஏற்றும் பணியும், பாக்கெட் போடும் பணியும் நடைபெறுகிறது. தண்ணீர் வடிந்து உப்பு உற்பத்தி துவங்க 10 நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: