பாரீஸ்: 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்த அவரை தலைநகர் பாரீசில் அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் வரவேற்றார்.
பாரீஸ் அருகே உள்ள சாண்டிலி அரண்மனையில் மேக்ரானுடன் இருநாட்டு உறவு, டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து இணைந்து செயல்பட உறுதியேற்றனர்.
இரு தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். இன்று பாரீசில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் 24-ம் தேதி பக்ரைன் செல்லும் பிரதமர் மோடி 25-ம் தேதி மீண்டும் பிரான்சில் உள்ள பியாரிட்ஸ் நகருக்கு திரும்புகிறார். அங்கு 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.