சென்னை: வேலூரில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கயிறு தொட்டில் கட்டி பாலத்தில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் குப்பன். ஆகஸ்ட் 19ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மறுநாள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதற்கு பிற சமூகத்தினர் மறுத்துள்ளனர். இதனால் மேம்பாலத்தின் வழியாக உடலை கயிறு தொட்டில் கட்டி இறக்கி எடுத்துச்சென்று அடக்கம் செய்துள்ளனர்.