×

பாலத்தில் கயிறு கட்டி இறக்கி சடலம் அடக்கம் ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை: வேலூர் கலெக்டருக்கு நோட்டீஸ்

சென்னை: வேலூரில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கயிறு தொட்டில் கட்டி  பாலத்தில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து  விளக்கம் அளிக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் குப்பன். ஆகஸ்ட் 19ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மறுநாள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதற்கு பிற சமூகத்தினர் மறுத்துள்ளனர். இதனால் மேம்பாலத்தின் வழியாக உடலை கயிறு தொட்டில் கட்டி இறக்கி எடுத்துச்சென்று அடக்கம் செய்துள்ளனர்.

இதுபற்றி படத்துடன் வெளியான ெசய்தியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோரின் கவனத்துக்கு மத்திய அரசின் உதவி  சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் நேற்று கொண்டு வந்தார். இதுபற்றி தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிபதிகள் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பாக   வரும் 26ம் தேதி வேலூர் மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இடம் ஒதுக்கீடு: இந்நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாசில்தார் முருகன், நாராயணபுரம் பகுதியில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், சுடுகாட்டுக்காக ஜவ்வாதுசமுத்திரம் அருகே பனந்தோப்பு பகுதியில் 50 சென்ட் இடத்தை ஒதுக்கீடு செய்தார்.


Tags : Rope, body, court, Vellore Collector, notice
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...