×

ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயுவுக்கு 13 பேர் பலியான விவகாரம் ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: மக்கள் அதிகாரம் அமைப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் 2004ல் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்ததாக கூறுவது குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு  நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பு தரப்பில் வாதிடப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பாலன் ஹரிதாஸ் வாதிடும்போது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மீதும்,  பேனர் வைத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு கசிந்து 13 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றார்.இதை கேட்ட நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. விவிஐபிக்களை மலர் தூவி வரவேற்பதற்கு பள்ளி குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பேனர் வைத்ததற்கு உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல் துறை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக ஏன் வழக்கு பதிவு செய்வதில்லை. அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் இரு பக்கங்களிலும் விளம்பர போஸ்டர்கள் மட்டுமே உள்ளது. புதிதாக யாராவது சென்னைக்கு வந்தால் அவர் எந்த சாலையில் உள்ளார் என்று கண்டுபிடிக்க இயலாதவாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன என்று கருத்து தெரிவித்தனர்.  மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் 13 ஊழியர்கள் விஷவாயு தாக்கி இறந்திருப்பதாக  கூறும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை மக்கள் அதிகாரம் அமைப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.



Tags : Sterile plant, gas, 13 kills, HC
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...