சென்னை: உலக ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2018ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த 10வது உலக ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும், இந்தியாவில் நடந்த 52வது ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளீர்கள். தங்களின் சாதனைகளை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம், இந்திய அரசு ‘அர்ஜுனா விருது’ அறிவித்து கவுரவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்களுக்கு, என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்று பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு, பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். பல்வேறு விருதுகளைப் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.