வெலிங்டன்: நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி.யாக இருப்பவர் டமாடி கபி. எதிர்க்கட்சி எம்பி.யான இவருக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தந்தை டமாடி கபி, தனது குழந்தை ஸ்மித்துடன் வந்தார். பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் அவர் தனது குழந்தையை கையில் ஏந்தியபடியே காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்டு, அவரிடம் இருந்து குழந்தையை வாங்கினார். பின்னர், குழந்தையை தன்மடியில் கிடத்தி அங்கு பாட்டிலில் இருந்த புட்டி பாலை குழந்தைக்கு புகட்டினார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.