சென்னை: வரும் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும். இது உலகில் முக்கிய நிகழ்வாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் இருந்து நேற்று காலை 9.45 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சந்திரயான்-2 நிலவை சுற்றி, நீள்வட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது, வரும் செப். 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு தரை இறங்கும் முயற்சியை தொடங்கும். அதிகாலை 1.55 மணிக்குள் தரை இறங்கிவிடும். இது, உலகத்தில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தரை இறங்கும்போது, அதன் வேகத்தை குறைத்து கட்டுப்படுத்த வேண்டும். இது, பெரும் சவாலான பணி. தரை இறங்கும்போது, ஒரு வினாடிக்கு 1.6 கிமீ வேகத்தில் போய்க் கொண்டிருக்கும். இந்த வேகத்தை, படிப்படியாக குறைத்து ஜீரோ கி.மீட்டருக்கு கொண்டு வர வேண்டும். இந்த சவாலான பணியை விஞ்ஞானிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.