×

காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக எம்பிக்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்: 15 அரசியல் கட்சிகள் பங்கேற்பு

புதுடெல்லி: வீட்டு காவலில் இருக்கும் காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக எம்பிக்கள் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்தும் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் காஷ்மீர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அனைத்து கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு திமுக  நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, மதிமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என மொத்தம் 15 கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், டி.ராஜா, பிருந்தா காரத், சீத்தாராம் யெச்சூரி, மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், டிகே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி, டி.கே.ரங்கராஜன், மணி சங்கர்அய்யர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: ஜம்மு காஷ்மீர் மக்களையோ, அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியிருப்பதன் விளைவாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களாகிய நாங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்போம்.

தகவல் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சிவில் சொசைட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஆகவே, வீட்டு சிறையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அப்பாவி மக்களையும் மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.மக்களின் பேச்சுரிமையை பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சகஜ நிலைமை திரும்புவதற்கும், அம்மாநில மக்கள் தங்களின் உற்றார் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகள் மீண்டும் அளிக்கப்படவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Kashmir leaders, DMK MPs, Delhi, protest, political parties
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...