மீனம்பாக்கம்: இந்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்து பாட்டில்களை மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த வந்த ஆசாமியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று காலை 8.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த அப்துல் சமின் (31), என்பவர் சுற்றுலா பயணி விசாவில் மலேசியா சென்று, சென்னை திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார்.
இதையடுத்து அவரது சூட்கேசை சோதனையிட்டபோது, அதில் 28 அட்டை பெட்டிகளில் நூற்றுக்கணக்கான மருந்து மருந்து பாட்டில்கள் இருந்தன. அந்த மருந்துகள் அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டவை. உடலை மெருகூட்டுவதற்கான இந்த மருந்துகள் மிகவும் அபாயகரமானவை.
ஓவர் டோஸ் ஆகிவிட்டால் உயிரிழப்புள் ஏற்படுத்தும். அதோடு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். மத்திய சுகாதாரத்துறை இந்த மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்துவதற்கோ, தயாரிப்பதற்கோ, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கோ தடை விதித்துள்ளது. சுங்க அதிகாரிகள் இந்த மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதை மறைத்து கடத்தி வந்த பயணி அப்துல் சமினை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த மருந்துகளை இவர் யாருக்காக கடத்தி வந்தார். யாரிடம் கொடுத்து விற்பனை செய்வார். ஏற்கனவே இது போல் கடத்தி வந்திருக்கிறாரா என பல்வேறு கோணங்களில் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.