சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை : மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது 5 வயது மகள் 1ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5.12.2016 அன்று காயத்ரி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். இந்நிலையில், வேலைக்கு சென்ற காயத்ரி வீட்டுக்கு திரும்பி வந்தபோது, சிறுமி அழுதுகொண்டே பதற்றத்துடன் இருந்தாள். காயத்ரி இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தார். அப்போது வீட்டிற்கு எதிரே எலக்ட்ரிக் கடை வைத்துள்ள நரேந்திரா (24) என்ற வாலிபர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அழுதுள்ளாள்.

இதுகுறித்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காயத்ரி புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நரேந்திராவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் லேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நரேந்திரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: