’அக்கவுண்டில் பணம் போட்டால் அழகி ரெடி’ ஆன்லைன் மூலம் ஆசாமி நூதன மோசடி: தூத்துக்குடி, கோவில்பட்டியில் 100க்கும் மேற்பட்டோர் ஏமாந்தது அம்பலம்

தூத்துக்குடி: அழகி வேண்டுமா, அக்கவுண்ட் நம்பரில் பணம் செலுத்துங்கள் என்று ஆன்லைனில் நூதன மோசடி நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏமாந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடியில் எப்போதும் ஆன்லைனிலேய மூழ்கி கிடக்கும் வாலிபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் பேஸ்புக்கில் ஒரு செல்போன் நம்பரை பார்த்துள்ளார். அதனருகே தூத்துக்குடியில் பெண்களுடன் இன்பமாக பொழுதை கழிக்க என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று இருந்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த அந்த வாலிபர் அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அதில் ஒரு ஆண் பேசியுள்ளார். அப்போது அவர், எங்களது அக்கவுண்ட் நம்பருக்கு பணம் அனுப்பினால் உங்கள் பகுதியில் உள்ள ஓட்டல்களிலேயே நீங்கள் அழகிகளை சந்திக்கலாம்...

ஜாலியாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த அந்த வாலிபர், உடனடியாக அந்த நபர் அனுப்பிய அக்கவுண்ட் நம்பருக்கு பணம் அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் பணம் வந்துவிட்டது. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அழகி தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ளார் என்று கூறி, அந்த ஓட்டல் பெயரையும், ரூம் நம்பரையும் குறிப்பிட்டு அங்கு செல்லுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் உற்சாகம் கரைபுரண்டு ஓடிய அந்த வாலிபர், ஆன்லைனில் அந்த நபர் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று ரூம் நம்பரை கூறியுள்ளார். அதற்கு ஓட்டலில் இருந்தவர்கள் எங்கள் ஓட்டலில் இப்படி ஒரு, ரூம் நம்பரே கிடையாது என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் அந்த வாலிபர் விடாமல் ஏதேதோ காரணம் சொல்லி பல ரூம்களை பார்த்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எந்த ரூமிலும் பெண் இல்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் ஆத்திரத்துடன் ஆன்லைன் நபரின் நம்பருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர், ‘எனக்கு பெரிய அரசியல் பின்புலம் உள்ளது உன்னால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்ததை பார்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட நபர், வழக்கம்போல் தனது வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். தூத்துக்குடியில் இரு ஓட்டல்களில் இதுபோன்று பலர் அக்கவுண்டில் பணம் செலுத்தி விட்டோம் ரூம் எங்கே இருக்கிறது என்ற ரீதியில் அணுகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் அதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அப்போது தூத்துக்குடியில் உள்ள பல பண பரிவர்த்தனை நிலையங்கள், தானியங்கி பணம் பெறும் மிஷின்களில் அதே அக்கவுண்டிற்கு பல இளைஞர்கள் பணம் பறிமாறியுள்ளதும், அதனடிப்படையிலேயே அவர்கள் ஓட்டல்களுக்கு சென்று ரூம்களை தேடியதும் தெரியவந்துள்ளது.

இதேபோன்று கடந்த சில மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைனில் குறிப்பிட்ட அக்கவுண்ட் நம்பரை நம்பி ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் அதிகம் பேர் பணம் அனுப்பி ஏமாந்துள்ளதாக தெரிகிறது. சில இளைஞர்கள் விசாரித்ததன் அடிப்படையில் மும்பையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இதற்காக அந்த மோசடி நபர் சீதாமுருகேஷ் என்ற பெயரில் வங்கி கணக்கு வைத்துள்ளதும், இதன் பின்னணியில் பெண்கள் உள்ளிட்ட சிலரும் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்று ஆன்லைனில் உள்ள செல்போன் எண்களில் பேசி பலரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர்களில் சிலர், அதற்கான பதிவுகளை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

Related Stories: