சென்னை : வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இலக்காக்களை ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சரிடமும் ஒப்படைக்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 28ம் தேதி முதல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முதல்வர் பழனிசாமி சுமார் 12 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இதனிடையே முதல்வர் தனது பொறுப்புகளை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக தனது இலக்காக்களை முதல்வர் யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக அவசரம் என்றால் அதிகாரிகளுடன் வீடியோ மூலம் பேசி அவர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் போது, அமைச்சரவை கூட்டமும் நடைபெற வாய்ப்பு இல்லை. இதனால் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்ற பன்னீர் தரப்பு எதிர்பார்ப்புக்கும் பலன் கிடைக்காது.