ஈரோட்டில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மருத்துவரை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த நிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தனபால் தனது மனைவி காயத்ரியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுகிழமை அனுமதித்துள்ளார். சிகிச்சையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இரு தினங்கள் ஆன நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையை குளிக்க வைப்பதற்காக செவிலியர் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் குழந்தையின் உடல்நிலை மோசமானதாகவும், அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லாததால்  குழந்தையை காப்பாற்ற உடனடியாக கோவை தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதை தொடர்ந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால் ஆத்திரமுற்ற உறவினர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவரை சிறை பிடித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணையை மேற்கொண்டனர். இதில் தங்களுடைய குழந்தை இறப்பதற்கு மருத்துவர்களின் மெத்தனப்போக்கே காரணம் எனவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: