சிவகங்கை: தேவகோட்டை அருகே போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், அங்கிருந்து 2,544 மதுபான பாட்டில்கள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சங்கரபதி நகர் பகுதியில், ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக சிவகங்கை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி ரோஹித்நாதன் உத்தரவின்பேரில், மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நித்தியப்பிரியா மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக அந்த வீட்டிற்குள் சென்றனர். போலீசாரைக் கண்டதும், வீட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், 2,544 குவார்ட்டர் மதுபான பாட்டில்கள் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தனர். மேலும் மதுபானம் தயாரிக்க தேவையான இயந்திரம், ரசாயன பவுடர், காலி பாட்டில்கள், லேபிள்கள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர். இந்த மதுபான பாட்டில்கள் ஒரிஜினல் பாட்டில்கள் போல இருந்தன.