சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றார். சுதந்திர தினத்தையொட்டி சிவனுக்கு ஏபிஜே அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதன் காரணமாக தலைமை செயலகத்திற்கு வருகை தந்த இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதினை வழங்கினார் அவருடைய பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரோவில் ராக்கெட்களை வடிவமைத்தல், திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரக்கூடிய சிவன் இஸ்ரோவுக்கான ராக்கெட்களை மேம்படுத்துதல் ஆகிய செயல்களில் பங்காற்றி வருகிறார். PSLV திட்டத்தில் இருந்து ராக்கெட்கள் திட்டமிட்டு, வடிவமைத்து ஆய்வு செய்வதிலும் பெரிய பங்காற்றி உள்ளார். ஏப்ரல் 2011-ம் ஆண்டு PSLV திட்டத்தில் பங்கேற்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் அனுப்பி சாதனை படைத்துள்ளார். மேலும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இஸ்ரோவின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு இவர் தலைமையில் சந்திராயன் 2 செயற்கை கோளானது ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.
ஏற்கனவே இவர் பல்வேறு விருதுகள் பெற்றிருந்தாலும் ஏபிஜே அப்துல் கலாம் விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தன்று அவர் இந்த விருதை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற காரணமாக அந்த நாளில் அவரால் பெற முடியவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று தலைமை செயலகத்தில் வருகை தந்த இஸ்ரோ தலைவருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி விருதை வழங்கி கௌரவப்படுத்தினார்.