டெல்லி: எனது தந்தைக்கு மட்டுமல்ல இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை என கார்த்திக் சிதம்பரம் எம்.பி டெல்லியில் பேட்டியளித்துள்ளார். டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கார்த்தி சிதம்பரம் கூறினார். மேலும் சட்டரீதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன் எனவும் தெரிவித்தார். மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது எனவும், இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என கூறினார். 2008-ல் சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். இது சம்பந்தமாக 20 முறை எனக்கு சம்மன் அனுப்பியதாக தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது என கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் கூறினார். யாரையோ திருப்திப்படுத்தவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கார்த்தி சிதம்பரம் ஆவேசமாக பேட்டியளித்தார். இந்த கைது நடவடிக்கையானது மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பழிவாங்கும் மற்றும் கீழ்த்தர செயல் என கூறினார்.
காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார். இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது எனவும், அரசியல் ரீதியாக மற்றும் சட்டப்பூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று தெரிவித்தார்.