தென்மேற்கு வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் குளிக்க தடை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற சுப்ரமணியசுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கடற்கரையில் பக்தர்கள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலமாக வீசக்கூடும் எனவும், 23ம் தேதி நள்ளிரவு 11.30 வரை கன்னியாகுமரி குளச்சல் முதல் ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை கடல் அலையின் உயரம் சுமார் 2.8 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கடற்பரப்பின் நீரோட்டம் ஒரு நிமிடத்திற்கு 51லிருந்து 72 வரையில் எழக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் மீன்பிடி படகுகள், உபகரணங்கள் மற்றும் வலைகள் ஆகியவற்றினை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தடை விதித்த காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து பக்தர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றினர். இந்த எச்சரிக்கையினை தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கும் பக்தர்கள் கடலில் குளிக்க அனுமதி இல்லை எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: