சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ப.சிதம்பரம் இரண்டு வகையில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துகிறார். ஒன்று பொதுவாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் இப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரிடும். 2வது, சட்டம் தன் கடமையை செய்கிறது. ஒரு சம்மன் வந்திருக்கிறது என்றால் அதை ஏற்று விசாரணைக்கு தன்னை உட்படுத்தி கொள்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். சிபிஐ சம்மன் அனுப்பியும் நியாயமான முறையில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர் ஒத்துழைக்க மறுப்பது ஏன். மடியில் கனமில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தானே. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இது பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் நேற்று மாலை வரை டெல்லியில் தான் இருந்திருக்கிறார்.
அப்பொழுதே கைது செய்திருக்கலாம். இன்னொன்று மத்திய அரசின் உளவுத் துறைக்கு ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருக்காது. கைது செய்ய நினைத்திருந்தால் அங்கேயே கைது செய்திருக்கலாம். சட்ட ரீதியாக ஒரு வீட்டில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ப.சிதம்பரம் ஓடி ஒளிந்து கொண்டு தவறை மறைத்து விட்டு அரசியல் காரணங்களை சொல்வது எப்படி சரியாக இருக்கும். சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி. ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.