சென்னை: திட்டமிட்டபடி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என்றும், அரசியல் காழ்ப்புணர்வோடு ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: நாளை(இன்று) திமுக சார்பில் தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து உங்கள் கருத்து? நாளைய(இன்றைய) தினம் திட்டமிட்டபடி தலைநகர் டெல்லியில் காஷ்மீர் பிரச்னையின் காரணமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன.