சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் ஒருமாத காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மாநில அளவில் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த கட்டிடங்களில் ஒருமாத காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கப்பட வேண்டும். இந்த பணிகள் முடிந்ததும், அதுகுறித்த விவரங்களை தலைமையிடத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.