டெட் தகுதித் தேர்வில் 98.62 சதவீதம் ஆசிரியர்கள் பெயில் : அதிர்ச்சியில் தேர்வு வாரியம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாள் தேர்வில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது ஆசிரியர்கள் மற்றும் தேர்வு வாரியம் இடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். முதல் தாள் தேர்வு 150 கேள்விகள் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கொள்குறிவகையில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பாடங்கள் மற்றும் உளவியல் பாடப்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால், ஆண்டு தோறும் தேர்வு நடத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இந்நிலையில், சில தனி நபர்கள் தொடர்ந்த வழக்கின் காரணமாக இடையில் கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதை சுட்டிக் காட்டி தகுதித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கேட்டு பட்டதாரிகள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. ஆனால், தகுதித் தேர்வு எழுதியோரில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை கையாண்டுள்ளதாக தெரியவருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் தகுதித் தேர்வில் முறைகேடுகளை அரங்கேற்ற சிலர் முயற்சி செய்துள்ளதை ஊகிக்க முடிகிறது.

குறிப்பாக, தேர்வில் பங்கேற்றவர்களில் 98 சதவீதம் பேர், விடைகளை குறியீடு செய்வதில் தவறு செய்துள்ளனர். விடைத்தாள் திருத்துவதற்கு தேவையான அத்தியாவசிய விவரங்களை குறிப்பிடாமல் விட்டுள்ளனர். கேள்வித்தாள்களின் குறியீட்டு எண்களைக்கூட விடைத்தாளில் எழுதாமல் விட்டுள்ளனர். மொழிக்கான தெரிவையும் குறிப்பிடவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அழுத்தம் திருத்தமாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தேர்வு எழுதிய அனைவருமே வேறு வழியை எதிர்பார்த்து தேர்வு எழுதியதாக ஊகிக்க முடிகிறது. இவர்கள் எப்படி  ஆசிரியர் பணியை சரியாக செய்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முதல் தாள் தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்கள், ரத்து செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் பட்டியல்களை ஒப்பிட்டு பார்த்ததில் 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில், மொத்த தேர்வு எழுதியோர் 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர். மொத்த மதிப்பெண்கள் 150க்கு அதிகபட்சமாக 99ம், குறைந்தபட்சமாக 1 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 75 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 2250 பேர். 80க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 843 பேர். 90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் 72 பேர். மொத்த தேர்வு எழுதியோரில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 2 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்றவர்கள் 1.38 சதவீதம் பேர்தான். 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான இந்த போட்டித் தேர்வில் 1.62 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தாலும், தொடக்க கல்வித்துறையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை சில ஆயிரம்தான் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ஒரு வாரத்தில் ஆசிரியர் கவுன்சலிங் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்குள் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு  முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories: