×

சென்னையில் பரபரப்பு சம்பவம் அதிமுக எம்எல்ஏ தம்பியின் கள்ளக்காதலிக்கு தர்ம அடி : மகனே அடித்து உதைத்தார்

சென்னை: அதிமுக எம்எல்ஏ ஒருவரின் தம்பியின் கள்ளக்காதலிக்கு தர்ம அடி விழுந்த சம்பவம் சென்னை கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியை சேர்ந்த எம்எல்ஏவை சுற்றி தொடர்ந்து பரபரப்பு சம்பவங்கள் நடந்தபடியே உள்ளதால் ஆளும் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சமீபத்தில், அந்த எம்எல்ஏவின் வற்புறுத்தலின் பேரில் அதிமுக பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டவர்களின் கட்சி பதவியை ஒரே நாளில் தலைமை பறித்தது. இதனால், அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்னை தற்போது, அதிமுக தலைமையின் 5 பேர் விசாரணை குழுவின் விசாரணையில் உள்ளது. எம்எல்ஏவை எந்த நேரமும் நேரில் அழைத்து விசாரணை நடத்த கட்சி மேலிடம் தயாராகி வருகிறது. இதனால், மனமுடைந்த எம்எல்ஏ மேலும் சில எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு தற்போது கொடைக்கானலில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள், அந்த எம்எல்ஏவின் தம்பி மூலம் மீண்டும் ஒரு சம்பவம் நேற்று முன்தினம் அரங்கேறி உள்ளது. இது அதிமுக கட்சிக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி, சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சில அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: சென்னையை சேர்ந்த எம்எல்ஏவின் உடன் பிறந்த தம்பிக்கு ஆஷா 40 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கள்ளக்காதலி இருக்கிறார். அவர் விதவை. அந்த பெண்ணுடன் எம்எல்ஏவின் தம்பி சென்னை, கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் உள்ள தனி பங்களாவில் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதை தெரிந்து கொண்ட எம்எல்ஏ தம்பியின் மனைவி, 2 நாட்களுக்கு முன் அவரது மகனை கோடம்பாக்கத்துக்கு அனுப்பி, அப்பா கள்ளக்காதலியுடன் இருக்கிறாரா என்று பார்த்து வர சொல்லி அனுப்பி இருக்கிறார். மகனும், நண்பர்கள் சிலருடன் கோடம்பாக்கம் சென்று பங்களாவின் கதவை தட்டியுள்ளார். வேறு யாரோ வந்திருக்கிறார் என்று நினைத்து கதவை திறந்த எம்எல்ஏவின் தம்பிக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மகனே இங்கு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அப்போது, அப்பாவுடன் இருந்த பெண் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மகன், அந்த பெண்ணை சரமாரியாக அடித்து காயப்படுத்தியுள்ளார். இதனால் அங்கு அதிக பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடி விட்டனர்.

மகனிடம் இருந்து தப்பிக்க  கொடைக்கானலில் இருந்த எம்எல்ஏவுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே எம்எல்ஏ, கோடம்பாக்கம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு சம்பவம் நடந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். போலீசாரும், எம்எல்ஏ தம்பி மீதோ, அவரின் மகன் மீதோ எந்த வழக்கும் பதிவு செய்யாமல், பெண்ணிடம் சமாதானம் பேசி அங்கிருந்து அனுப்பி வைத்து பிரச்னையை அமைதியாக முடித்து வைத்துள்ளனர்.
எம்எல்ஏ தம்பியின் மகன் அடித்ததில் படுகாயம் அடைந்த ஆஷா, தற்போது சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை சார்பில் கோடம்பாக்கம் போலீசாருக்கு நேற்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனாலும் போலீசார் இந்த விஷயத்தையும் வெளியில் தெரியாமல் மறைக்கவே தற்போது முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், எம்எல்ஏவின் எதிர்ப்பு கோஷ்டியினர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, மற்ற அதிமுக நண்பர்களுக்கும், கட்சி தலைமைக்கும் வாட்ஸ்ஆப் மூலம் தகவலை பரப்பி சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.

Tags : Incident in Chennai , charm, AIADMK MLA Thambi
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்