சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: சிதம்பரம் மீது சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கு பாஜவின் அப்பட்டமான சட்ட விதிமுறை மீறல் ஆகும். அவரது நடமாட்டத்தை அங்குலம் அங்குலமாக சிபிஐ கண்காணித்துக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அவர் இருப்பது தெரிந்தும் கூட அவர் இல்லத்திற்கு சென்று அவர் வீட்டில் இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்தனர். அவர் தலைமறைவாகி விட்டார் என்ற உருவகத்தை தோற்றுவிக்கின்றனர். இதில் அரசியல் இருக்கிறது. வேண்டுமென்றே சிதம்பரம் குறிவைக்கப்படுகிறார் என்பது அனைவருக்குமே மிகத்தெளிவாக தெரிகிறது.
இதிலிருந்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், பாஜ ஒரு சர்வாதிகார இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் ஒருவர் குறிவைக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதை செய்கின்றனர். ஒரு மனிதனுடைய பெருமையை, புகழை அழிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்கின்றனர். பாஜவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. ஜனநாயகம்தான் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.