வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால் காதல் ஜோடி ஓட்டம் சிறுமியின் உறவினரை அடித்துக்கொன்ற காதலனின் உறவினர்கள்

* தஞ்சையில் 11 பேர் கைது

* பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு

பாபநாசம்: காதல் ஜோடி ஊரை விட்டு ஓடியது. இதனால் இரு தரப்பு குடும்பத்தினரும் தாக்கிக் கொண்டனர். இதில், சிறுமியின் உறவினர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 11 பேரை கைது செய்தனர். கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது உறவினர் வீடு, பெருமாக்கநல்லூரில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்ற சிறுமிக்கும், பெருமாக்கநல்லூரை சேர்ந்த சதாசிவம் மகன் லோடு ஆட்டோ டிரைவரான சூர்யா (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வருகின்றனர். இந்த விவகாரம் 2 மாதங்களுக்கு முன் சிறுமி வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் கண்டித்தனர். பெற்றோரின் கண்டிப்பு குறித்து காதலனுக்கு சிறுமி தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, கடந்த 18ம் தேதி இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பெண் வீட்டார் 10 பேருடன் காதலனின் ஊரான பெருமாக்கநல்லூர் வந்தனர். காதலன் வீட்டுக்கு சென்று உன் மகன் எங்கே என கேட்டு சதாசிவத்திடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அப்போது வீட்டின் கூரையை பிரித்து எறிந்து விட்டு, வீட்டு முன் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோவை அடித்து நொறுக்கினர். மேலும் என் மகளை ஒப்படைக்காவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டி விட்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் காதலனின் பெற்றோர், உறவினர்கள் 12 பேருடன் அதே ஊரில் உள்ள காதலியின் உறவினரான கருணாகரன் (40) என்பவரது வீட்டுக்கு உருட்டு கட்டை, ஆயுதங்களுடன் சென்றனர். பின்னர், ‘‘எங்கள் வீட்டுக்கு வந்து தாக்குதல் நடத்துகிறாயா’’ என்று கூறி கருணாகரனை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

அப்போது தடுக்க வந்த அவரது மனைவி சத்யாவையும் தாக்கினர். இதனால், 2 பேரும் மயங்கி கீழே விழுந்தனர். இதை பார்த்த 12 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதன்பின், அருகில் உள்ளவர்கள், படுகாயமடைந்திருந்த கருணாகரனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கருணாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து காதலனின் உறவினர்களான அய்யப்பன் (24), கார்த்திக் (28), தினேஷ் (25), சுரேஷ்குமார் (17), குருமூர்த்தி (30), பிரகாஷ் (24) உள்ளிட்ட11 பேரை கைது செய்தனர். மேலும் காதலனின் தந்தை சதாசிவத்தை தேடி வருகின்றனர். இருதரப்பு மோதல் அதிகரிக்காத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: