ஐதராபாத்: அமேசான் நிறுவனம் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் வகையில் ஐதராபாத்தில் கட்டியுள்ள மிகப்பெரிய வர்த்தக மையத்தை நேற்று திறந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி மிகப்பெரிய வர்த்தக மையத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இதில், அலுவலகம் மட்டும் 18 ஆயிரம் சதுரஅடி கொண்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று திறப்புவிழா நடைபெற்றது. இந்தியாவில் மட்டும் 62 ஆயிரம் ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ஐதராபாத்தில் உள்ள இந்த புதிய மையத்தில் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். ஒரே இடத்தில் அமேசான் நிறுவனம் கட்டியுள்ள உலகளவிலான மிகப்பெரிய கட்டிடம் இதுவாகும்.