ஹூஸ்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்கும், ‘ஹவுடி மோடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இதுவரை 50 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்த மாதம் 27ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். ஐநா கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக, ஹூஸ்டன் நகருக்கு அவர் செல்கிறார். அங்கு, முன்னணி இந்திய அமெரிக்க தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு சமூகத்தை சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். பின்னர், அமெரிக்க இந்தியர்களால் நடத்தப்படும், ‘ஹவுடி மோடி’ மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த மாநாடு ஹூஸ்டனின் என்ஆர்ஜி அரங்கில் நடக்கிறது. இதில், பங்கேற்பதற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. இது, இலவச டிக்கெட் என்ற போதிலும், மோடியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் இதுவரை 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். புதியதாக பதிவு செய்பவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.