திருவனந்தபுரம்: கேரளாவில் முதன் முதலாக அரசுத் துறைகளில் பெண்களையும் டிரைவர் பணியில் நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு பினராய் விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற போது பெண்களுக்கு சம உரிமை வழங்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அரசுத் துறைகளில் பெரும்பாலான பொறுப்புகளில் பெண்கள் பதவி வகித்து வருகின்ற போதிலும் இதுவரை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் டிரைவர் பணியில் பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் டிரைவர் பணிக்கு பெண்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பினராய் விஜயன் தலைமையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக பணி நியமன சட்டங்களில் மாற்றம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.