வெளிநாட்டுக்கு மனைவி படிக்க சென்றபோது விவாகரத்து ஆவணம் தயாரித்து 2வது திருமணம் செய்தவர் கைது

சென்னை:சென்னை தி.நகர் பத்மநாபன் தெருவை சேர்ந்தவர் சரண்குமார் ராஜி (35). இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பிரசாந்தி (32) என்பவருடன் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த  2014ம் ஆண்டு முதல் பிரிந்து, பிரசாந்தி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு பிரசாந்தி வெளிநாட்டில் படிக்க சென்றதால் தனது மகளை கணவரின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.  பின்னர் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்து வந்த பிரசாந்தி தனது மகளை பார்க்க கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.  அப்போது தனது கணவர் ராதா என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய  வந்தது.

இதுகுறித்து பிரசாந்தி தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் சரண்குமார் ராஜியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முதல் மனைவியுடன் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து ஆனதாக  போலியாக ஒரு ஆவணத்தை தயாரித்து, அதன் மூலம் ராதாவை இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முதல் மனைவிக்கு தெரியாமல் போலி ஆவணம் மூலம் இரண்டாவது திருமணம் செய்த சரண்குமார் ராஜியை கைது ெசய்தனர்.

Related Stories: