ஐதராபாத்தில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து கும்மிருட்டில் தப்பி ஓடிய தெலுங்கு ஹீரோ: சிசிடிவி கேமராவில் சிக்கினார்

திருமலை: தெலுங்கு திரை உலகின் இளம் ஹீரோ ராஜ் தருண். பல்வேறு குறும்படங்கள், சூப்பிஸ்த்தா மாவா, உய்யாலா ஜம்பாலா உட்பட சில தெலுங்கு  திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது இரண்டு திரைப்படங்களில் ராஜ் தருண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான காரை ராஜ் தருண் ஓட்டிச்சென்றார். ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோடில் சென்றபோது திடீரென சாலை தடுப்பில் கார் மோதி பள்ளத்தில் இறங்கியது. உடனடியாக காரில் இருந்து இறங்கிய ராஜ் தருண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஐதராபாத் போக்குவரத்து போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விபத்திற்கு பின் காரில் இருந்து இறங்கிய நடிகர் ராஜ் தருண் கும்மிருட்டில் பரபரப்புடன்  தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடிகர் ராஜ் தருணை அழைத்து விசாரனை நடத்த ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: