புதுடெல்லி: கஞ்சன்ஜங்கா உட்பட இமயமலையின் 137 சிகரங்களுக்கு மலையேற்றம் செல்வதற்கு வெளிநாட்டினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டினர் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்றால், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே, அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட முடியும். ஆனால், அரசு இந்த நடைமுறையை தற்போது எளிதாக்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மலையேற்றம் செல்ல விரும்பும் வெளிநாட்டினர் நேரடியாக இந்திய மலையேற்ற அமைப்பிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். சுற்றுலாத்துறையின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள துனாகிரி (7066 மீ), ஹர்டியோல் (7151 மீ), சிக்கிமில் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு காப்ரு சிகரம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கைலாச மலை (6400 மீ), இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் முல்கிலா (6571 மீ) உள்ளிட்ட சிகரங்கள் இந்த பட்டியிலில் இடம்பெற்றுள்ளன.