தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சக்கண்ணன். இவரது 3வது மகன் சிவகுமார் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு வெங்கடேஷ் பண்ணையாரின் ஆதரவாளரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஆத்திப்பழம் என்பவர் சோரீஸ்புரம் செங்குளத்தில் கொன்று புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிவகுமார் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி 2வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இறுதிக்கட்ட விசாரணைக்கு தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று சிவகுமார் புறப்பட்டார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே தனது அண்ணன் வக்கீல் முத்துக்குமாரின் அலுவலகத்தில் இருந்து, தென் பாகம் காவல்நிலையத்தின் பின்புறம் கோர்ட்டுக்கு செல்லும் சிறிய சந்து வழியாக சிவகுமார் செல்ல முயன்றார். அவர் ரோட்டை கடக்கும் போது அங்கு 3 பைக்குகளில் வந்த கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக அரிவாள் மற்றும் வாளால் வெட்டித் தள்ளியது. இதில் அவருக்கு தலை, கழுத்து, முதுகு பகுதிகளில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சரிந்தார்.