வேலூரில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல் சுற்றிவளைப்பு

வேலூர்: வேலூரில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பலை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.  சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான கன்டெய்னர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னை துறைமுகத்திலிருந்து ₹11 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு ஓசூர் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை துரை என்பவர் ஓட்டி வந்தார்.  வேலூர் அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் சாலையோரம் கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றார் டிரைவர் துரை. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கன்டெய்னர் லாரியை காணவில்லை. யாராவது லாரியை சரக்குடன் கடத்தி சென்றிருக்கலாம் என்று கருதிய அவர், அதுபற்றி உரிமையாளர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தார்.  உடனடியாக காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் லாரி எங்கே செல்கிறது என வெங்கடேஷ் கண்காணித்து, ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பள்ளிகொண்டா டோல்கேட் அருகே சென்ற லாரியை, விரிஞ்சிபுரம் போலீசார் மடக்கி பிடித்தனர்.

லாரியில் இருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார்(22), லோகேஷ்(22), ராகேஷ்குமார்(22), அன்பு(22), பார்த்திபன்(22) என்பது தெரிய வந்தது. இந்த கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வேளாண்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற யாசீம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த சிவா என்பவரை கலவை கூட்ரோடு அருகே தாக்கிவிட்டு அவரது காரை இந்த கும்பல் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இரவு நேரங்களில் தனியாக பைக்கில் வருபவர்களை தாக்கி பைக்குகளை பறித்து செல்வதும், டிரைவர்கள் அயர்ந்த நேரத்தை அறிந்து வாகனங்களை திருடிச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒரு கார், 4 ஆட்டோக்கள், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: