பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், பூஞ்ச் மாவட்டம் மெண்டார் செக்டாரில் உள்ள தப்ராஜ் கிராமத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது சிறிய ரக கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வீசினர். இதில் மொகமது அப்துல் கரீம்(22) என்ற வாலிபர் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.