வெள்ளப்பெருக்கால் அபாய அளவை எட்டும் யமுனை ஆறு: கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி வழியே பயணிக்கும் யமுனை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அபாய அளவை எட்டும் என கணிக்கப்பட்டிருப்பதால் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு உட்பட்ட இமய மலையில் யமுனோத்ரி என்ற இடத்தில் யமுனை ஆறு உற்பத்தி ஆகிறது. டெல்லி, ஹரியானா மாநிலங்கள் வழியே பயணித்து உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் என்றழைக்கப்பட்ட பிரயாக்ராஜில் கங்கை நதியில் சங்கமம் ஆகிறது. இதை அடுத்து நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை மற்றும் ஹரியானா மாநிலங்களில் நிரம்பி வழியும் நீர் தேக்கங்கள் ஆகியவற்றினால் யமுனை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது யமுனை ஆற்றில் 206.60 மீட்டர் அளவிற்கு வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது. யமுனை ஆற்றின் நீர் மட்டம் இன்று மாலைக்குள் உச்சக்கட்ட அபாய அளவான 207.08 மீட்டரை எட்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் கூறியுள்ளது. யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் டெல்லியில் அதன் ஆற்றங்கரையோரம் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். டெல்லி யமுனா பஜார் பகுதிக்குள் வெள்ளம் புகுந்திருப்பதால் 500க்கும் அதிகமான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் முடங்கியுள்ளது.

Related Stories: